Sunday 16 June 2013

பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் உள்ளவர்களாக இருப்பது ஏன்?

"பாடசாலை விட்டு வீடு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் மூர்க்கமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்" என்று அதிகமான பெற்றோர் முறைப்படுகின்றார்கள்.  சாதாரண பேச்சுத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'ததிங்கினதோம் போடுகின்றார்கள்' என்று சொல்லலாம்.  இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், "அவன் அப்பா போல கோவக்காரன்", "சண்டைக் கப்பல் வந்துவிட்டது", "பெண் பிள்ளை என்றால் பொறுமை வேண்டும்", என்று ஒரு வார்த்தையில் அல்லது ஒரு விமரிசனத்துடன் பிரச்சனையை முடிக்கப் பார்க்கின்றோமா ?

பிள்ளைகள் இவ்வாறு தொழில்படுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.  பாடசாலை முடிந்து வீடு வரும்போது பிள்ளைகள் பசியாகவும் களைப்பாகவும்  இருப்பார்கள்.  அதுமட்டும் அல்லாமல் பல்வேறுபட்ட வித்தியாசமான மனநிலையிலும் இருப்பார்கள்.  பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரினால் பாராட்டுக்கள் வாங்கும் போதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.  மறுதலையாக குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரின் கண்டிப்புக்குள்ளாகும் போதும் கவலையான மனநிலையுடன் வருவார்கள்.  அதுமட்டும் அல்லாமல் நண்பர்களுடனும் சகமாணவர்களுடனும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தால் கோபமான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.

பிள்ளைகள் பசி, களைப்பு, கோபம், கவலை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது வீட்டிற்க்கு வந்ததும் இன்னும் பிரச்சனை பண்ணுவார்கள்.  அளவுக்கு அதிகமாக சத்தம் போடுதல், சண்டை போடுதல், சப்பாத்துக்கள்ளை கழற்றி எறிதல், புத்தகப் பையை வீசி எறிதல், கணநேரத்தில் வீட்டைக் குப்பையாக்குதல் என அதிக அளவில் தொந்தரவு செய்வார்கள். அமைச்சல் இல்லாத பிள்ளைகளாக நடந்து கொள்வார்கள்.  சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.  பெற்றோரும் களைப்பும் பசியும் சோர்வுமாக இருக்கிற பட்சத்தில் கோபமும் சண்டையும் கூச்சலுமே இறுதி விளைவாக அமைந்து விடும்.

இவை எல்லாவற்றையும் தவிர்த்து மனதுக்கு இனிய ஆரோக்கியமான வீட்டுச் சூழலை உண்டாக்கக் கூடிய வழிமுறைகள் சில:

1.  பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடு வரும்போது அவர்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் வீட்டை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அடுக்கி வையுங்கள்.

2.  சாப்பாட்டு மேசையை பல இயற்க்கை வண்ண உணவுகளால் அலங்கரித்து வையுங்கள்.  பிள்ளைகளிற்க்குப் பிடித்த ஒன்றிரண்டு உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.  பிள்ளைகளுடன் சேர்ந்து உணவு அருந்துங்கள்.  பிள்ளைகள் உணவருந்தும் போது நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

4.  சாப்பாட்டு வேளையில் பாடசாலையில் நடந்த விடயங்களைப் பற்றி உரையாடுங்கள்.  பிள்ளைகளின் தவறைக் கண்டுபிடித்து கண்டிக்காதீர்கள்.  அவர்கள் கவலையாக இருந்தால் ஆறுதல் படுத்துங்கள்.  அவர்களின் வெற்றிகளைப் பாரட்டுங்கள்.  அவர்களின் பிரச்சனகளுக்கு ஆரோக்கியமான அறிவுரை கூறுங்கள்.  சாப்பாட்டு நேரமானது மிகவும் மகிழ்சியாக இருக்க வேண்டிய ஒரு நேரமாகும்.  பிள்ளைகளை விரைவாகச் சாப்பிடுமாறு அவசரப்படுத்தாதீர்கள்.  அவர்கள் உணவருந்துவதற்க்குப் போதுமான நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.

5.  உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகளை வீட்டுப் பாடம் செய்ய ஊக்கப் படுத்துங்கள்.  சில பிள்ளைகள் தனியாகத் தம் அறைகளில் இருந்து வீட்டுப் பாடம் செய்ய விரும்புவார்கள்.  சில பிள்ளைகள் சாப்பாட்டு மேசையில் இருந்து பெரியவர்களின் உதவியுடன் செய்ய விரும்புவார்கள்.  வீட்டுப் பாடம் செய்யும் வேளையில் வீட்டை அமைதி நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

6.  வீட்டுப் பாடம் முடிந்த பின்பு பிள்ளைகள் ஓய்வு எடுக்க வலியுறுத்துங்கள்.  பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் ஓய்வு எடுங்கள்.  உங்களிற்கும் ஓய்வு தேவை என்பதை பிள்ளைகளிற்கு விளங்க வையுங்கள்.  இழந்த சக்தியை ஈடு செய்ய இரு சாராருக்கும் ஓய்வு அவசியம்.



No comments:

Post a Comment