Sunday 19 May 2013

சிறுவர்கள் நண்பர்களினூடாகக் கல்வி கற்கின்றார்கள். தம் திறன்களை வளர்த்துக் கொள்கின்றார்கள்


ஒரு சராசரி மனிதராக எமக்குள்ளே எத்தனையோ திறமைக் குறைவுகளும் பலவீனங்களும் இருக்கும்.  ஆனாலும் எமக்குள்ளே இருக்கும் குறைகள் எம் பிள்ளைகளுக்கு வருவதை நாம் யாருமே விரும்புவது இல்லை. எமக்கு இருக்கும் ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதை விட எமக்கு இல்லாத ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதற்க்காக நாம் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.
 பெரும்பாலான வேளைகளில் எம் முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைவதும் உண்டு.  அனாலும் எம்மால் முடியாத ஒரு விடயம் எம் பிள்ளைகளின் சம வயது நண்பர்களினால் இலகுவாக முடிந்துவிடுவதும் உண்டு.

இயல்பாகவே பிளைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கின்ற ஒரு தாய் நான்.  பிளைகள் வீட்டுக்கு வெளியே சென்றால் திரும்பி வீடு வந்து சேரும் வரையும் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவேன்.  என் 9 வயது மகன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வளியே சென்றால் அவருடைய பாதுகாப்பை எண்னி மிகவும் பயப்படுவேன்.  அவரை வாகன நெரிசல் அதிகமுள்ள பிரதான வீதிகளில் மிதி வண்டியுடன் செல்ல நான் அனுமதித்ததே இல்லை.  அனாலும் அவர் வயதை ஒத்த பிள்ளைகள் மிக லாவகமாக பிரதான வீதிகளில் மிதி வண்டி செலுத்துவதை நான் பார்த்திருக்கின்றேன்.  இதனால் என்னுடய பயந்த சுபாவம் எனக்குள்ளே குற்ற உணற்ச்சியையும் ஆற்றாமை உணர்வையுமே ஏற்ப்படுத்தின.  என்னுடைய இந்தத் தவறான அணுகு முறைக்குக் காரணம் வாகன நெரிசல் அதிகமுள்ள பிரதான வீதிகளில் மிதி வண்டி செலுத்துவதில் எனக்குள் இருந்த திறமைக் குறைவேயாகும்.  என்னுடைய அணுகுமுறை தவறு என்று உணர முடிந்த எனக்கு அதைத் திருத்திக் கொள்ளத்தான் முடியவில்லை.

ஒரு மதிய வேளையில் என் மகனும் அவர் நண்பர் ஆரிசும் என்னிடம் வந்து தாம் பிரதான வீதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று இனிப்புப் பண்டங்கள் வாங்க விரும்புவதாக என்னிடம் அனுமதி கேட்டார்கள்.  ஆரிஸ் பற்றி எனக்குத் தெரியும்.  அவர் மிகவும் துணிச்சல் உள்ளவர்.  அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்று பழக்கம் உள்ளவர்.

கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்தேன்.  இருவரும் அலுவல் முடித்துக்கொண்டு பத்திரமாகத் திரும்பி வந்தார்கள்.  திரும்பி வந்த போது என் மகனின் முகத்தில் இருந்த பெருமிதத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் அளவே இருக்கவல்லை.

ஆம்! இந்த சந்தர்ப்பதில் என் மகன் தன் நண்பனினூடாக ஒரு திறனை வளர்த்துக்கொண்டார்.  இங்கு நான் எழுதியது ஒரு உதாரணம் மட்டுமே.  இப்படியாகப் பிள்ளைகள் தம் நண்பர்களினூடாக திறன்களை வளர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

இந்த உண்மையை மனதில் கொண்டு பிளைகள் தம் நண்பர்களுடன் உறவாட அல்லது விளையாட நேரம் ஒதுக்கிக் கொடுப்பது பெற்றோராகிய எமது கடமையாகும்.

1 comment:

  1. குழந்தைகள் தினமும் நண்பர்களுடன் ஒரு மணி நேரம் ஓடியாடி விளையாட வேண்டும்
    திறன் வளர்ப்பது, பழகுவது எல்லாம் கற்றுக்கொள்வார்கள்

    ReplyDelete